பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சென்றடைந்தார் டி.கே.சிவகுமார் - விரைவில் பேச்சுவார்த்தை

 
dk sivakumar

கர்நாடகாவில் முதலமைச்சர் பதவிக்கு போட்டி நிலவி வரும் நிலையில், டெல்லி சென்றுள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கட்சி தலைமை உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், , மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது  முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். அத்துடன் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.   கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர்  டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது.  காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும், அடுத்த முதல்வர் யார் என்கிற முடிவு எட்டப்படவில்லை. ஆனால் அதேநேரம் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரையும் டெல்லி வருமாரு கட்சி தலைமை அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில், சித்தராமையா மட்டுமே நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில், டி.கே.சிவகுமார் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்தார்.  இந்த நிலையில், அவர் இன்று டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில், அவர் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவர் புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசும்போது, கட்சி விரும்பினால் அவர்கள் எனக்கு பொறுப்பை வழங்கலாம். எங்களுடையது ஒற்றுமையான ஒரு வீடு. எங்களுடைய எண்ணிக்கை 135. யாரையும் பிரிக்க நான் விரும்பவில்லை. அவர்கள் என்னை விரும்புகிறார்களோ அல்லது இல்லையோ, நான் பொறுப்புள்ள நபர். நான் மிரட்டமாட்டேன் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, இன்று மதியம் அவர் டெல்லி வந்தடைந்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமையுடனான பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட உள்ளார்.