கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவகுமாரை தேர்வு செய்ய வேண்டும்- ஆதரவாளர்கள் முழக்கம்

 
DK Sivakumar

கர்நாடகத்தில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், அம்மாநில தலைவர் டி.கே.சிவகுமாரை முதலமைச்சராக தேர்வு செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 36 மையங்களில் வாக்கு என்னும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 36 அறைகளில் 4256 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு என்னும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் கர்நாடகாவில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜக தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. கர்நாடக தேர்தல் தற்போதைய நிலவரத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 224 தொகுதிகளில் 115-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கட்சியான பாஜக 70க்கும் மேற்பட்ட இடங்களிலும் மதசார்பற்ற , ஜனதா தளம் 20க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் கர்நாடகத்தில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பான கேள்வி எழுந்துள்ளது. தனது தந்தை கர்நாடகாவின் முதலமைச்சர் ஆவார் என சித்தராமையாவின் மகன் கூறியிருந்தார். இந்த நிலையில், சித்தராமையாவின் மகன் கருத்துக்கு, அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டி.கே.சிவகுமாரை கர்நாடகாவின் முதலமைச்சராக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.