"2 டோஸ் போட்டால் 10% தள்ளுபடியில் மது" - குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்!
கொரோனா இரண்டாம் அலை முற்றிலும் ஓய்ந்துவிட்டதாகவே தெரிகிறது. புதிதாக வேறு அலை வருவதற்குள் நாட்டின் பெரும்பான்மையினருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப மாநில அரசுகளையும் வலியுறுத்தியுள்ளது. மிகவும் குறிப்பாக அந்தந்த மாவட்டத்தை நிர்வகிக்கும் அரசு அதிகாரிகளான ஆட்சியர்களுக்கே மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை 50 சதவீதத்திற்கு மேல் கொண்டுசெல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்கள் புதுப் புது முயற்சிகளின் மூலம் மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். குலுக்கல் முறையில் பைக், ஸ்கூட்டர், ஃபிரிட்ஜ் என பல்வேறு பரிசுகளை அறிவித்து மக்களை தடுப்பூசி முகாம்களுக்கு இழுத்து வருகின்றனர். ஆனால் குடிமகன்களை மட்டும் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் சில நாட்கள் மது அருந்த முடியாது என்பதால் தயக்கம் காட்டுகின்றனர். ஆகவே மதுக்கடைகளில் கைவைத்துள்ளனர் அதிகாரிகள்.
அதாவது இரண்டு டோஸ் போட்டுக்கொண்டால் மட்டுமே மது வழங்கப்படும் என்ற அதிரடி உத்தரவை மாவட்ட கலால் துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகங்கள் பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்ட நிர்வாகம் கடந்த வாரம் இதே அறிவிப்பை வெளியிட்டது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மது வழங்கப்படவில்லை. தற்போது மந்த்சூர் மாவட்ட கலால் துறை, 2 டோஸ் போட்டிருந்தால் மதுவின் விலையில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது குடிமகன்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.