மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வருகிற ஜூன் 01ம் தேதி வரை நீட்டிப்பு!

 
manish sisodia

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வருகிற ஜூன் 01ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.  இந்த அரசு மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதோடு,  சலுகைகளையும் அரசு வழங்கியதை குற்றச்சாட்டு எழுந்தது.   இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக  சிபிஐ குற்றம் சாட்டியுள்ள நிலையில்,  இதில்  அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவிற்கு  தொடர்பு இருக்கலாம் எனவும்  சிபிஐ சந்தேகிக்கித்தது.   இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க  சிசோடியாவுக்கு  சிபிஐ சம்மன் அனுப்பியதை தொடர்ந்து,  டெல்லி சிபிஐ அலுவலகம் முன்பு அவர் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். விசாரணைக்கு பின் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதனிடையே டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது தனியே அமலாக்கத்துறை கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து மணிஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தியது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அவர் டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதையடுத்து, அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்கில் சிசோடியாவுக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.