ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி
![ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/99f3bc27b76079bee20c7d166195c665.webp)
உத்தரபிரதேசத்தின் ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதி அடிபாகத்தில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உத்தர பிரதேசம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதியின் சுற்றுச் சுவரில் இந்து கடவுள்களான சிருங்கார் கௌரி, பிள்ளையார், ஹனுமன் மற்றும் நந்தி சிலைகள் இருப்பதாகவும், அதற்கு தினமும் பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வாராணசி சிவில் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் சுற்றுச் சுவரில் உள்ள இந்து கடவுள் சிலைகளை எதிர்தரப்பினர் சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தை அளவிட உத்தரவிட்டது. ஞானவாபி மசூதியில், நீதிமன்ற உத்தரவின்பேரில் அண்மையில் வீடியோ வாயிலாக அளவிடும் பணி முடிவடைந்தது. ஞானவாபி மசூதியில் அளவிடும் பணியின் போது சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முஸ்லிம் தரப்பினர் அது சிவலிங்கம் இல்லை நீரூற்று என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதி அடிபாகத்தில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. காசி விசுவநாதர் கோவில் அறக்கட்டளை வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்க வேண்டும் என்றும் பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்குள் பூஜைகள் நடத்தப்படும் என ஹிந்து பிரிவு அறிவிக்கப்பட்டுள்ளது.