திரிபுரா உள்பட 3 மாநில தேர்தல் முடிவுகள்.. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

 
தேர்தல் முடிவுகள்

நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா (பிப்.16), மேகாலயா மற்றும் நாகாலாந்து (பிப்.27) ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.  கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியாவின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி,  திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பா.ஜ.க. 36 முதல் 45 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ளும். இடதுசாரி 6 முதல் 11 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

பா.ஜ.க.

நாகாலாந்தில் பா.ஜ.க.-என்.டி.பி.பி. கூட்டணி 38 முதல் 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும். என்.பி.எப். 3 முதல் 8 இடங்களிலும், காங்கிரஸ் 1 முதல் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேகாலாயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது, தொங்கு சட்டப்பேரவை அமையக்கூடும். இருப்பினும் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான என்.பி.பி. கட்சி 18 முதல் 24 இடங்களில் வெற்றி பெற்று அதிக தொகுதிகளை வென்ற பெரிய கட்சியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஒரு தோராயமானது என்பதால் அது தவறாக அமையலாம்.

இந்திய தேர்தல் ஆணையம்

நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இன்று மதியத்துக்குள் தேர்தல் முடிவுகள் தெளிவாக தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நாகாலாந்தில் ஒரு தொகுதியில் (அகுலுடோ) பா.ஜ.க. போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. மேகாலயாவில் ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த 2 மாநிலங்களிலும் தலா 1 தொகுதி குறையும்.