மேகாலயா மாநிலத்தின் முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்றார் கான்ராட் சங்மா

 
conrod sangma

மேகாலயா மாநிலத்தின் முதலமைச்சராக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். 

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய  3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.  60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி  வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதேபோல் தலாக 60 தொகுதிகளைக் கொண்டுள்ள   நாகாலாந்து , மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த 3 மாநிலங்களிலும்  வாக்கு எண்ணிக்கை கடந்த 02ம் தேதி நடைபெற்றது.  திரிபுரா மற்றும் நாகலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மேகாலயாவில் ஆளும் கட்சியான என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவிடம் என்பிபி கட்சி ஆதரவு கோரியது. ஆதரவு தருவதாக என்பிபி கட்சியின் தலைவருக்கு மேகாலயா பாஜக தலைவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் கான்ராட் சங்மா  தலைமையில் மீண்டும் என்.பி.பி., பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைத்தது. இதனை தொடர்ந்து மேகாலய ஆளுநர் பாகு சௌஹானை நேரில் சந்தித்து, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.  


இந்நிலையில், மேகாலயா மாநிலத்தின் முதலமைச்சராக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு அம்மாநில் ஆளுநர் பாகு சௌஹான் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதல்வர்களாக பிரஸ்டோன் டின்சாங் மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோர் பதவியேற்றனர். இதேபோல் அமைச்சர்கள் பலரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.