பாஜக முழு ஆதரவு - மேகாலயாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் கான்ராட் சங்மா

 
meghalaya npp

மேகாலயா தேர்தல் வெற்றியை தொடர்ந்து, அம்மாநில ஆளுநர் பாகு சௌஹானை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க கான்ராட் சங்மா இன்று உரிமை கோரினார்.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய  3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.   அதன்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி  வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதேபோல் தலாக 60 தொகுதிகளைக் கொண்டுள்ள   நாகாலாந்து , மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த 3 மாநிலங்களிலும்  வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மேகாலயாவில் ஆளும் கட்சியான என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவிடம் என்பிபி கட்சி ஆதரவு கோரியது. ஆதரவு தருவதாக என்பிபி கட்சியின் தலைவருக்கு மேகாலயா பாஜக தலைவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் கான்ராட் சங்மா  தலைமையில் மீண்டும் என்.பி.பி., பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைகிறது.  

இந்நிலையில், மேகாலய ஆளுநர் பாகு சௌஹானை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க கான்ராட் சங்மா இன்று உரிமை கோரினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கான்ராட் சங்மா கூறியதாவது: பாஜக எங்களுக்கு முழு ஆதரவை கொடுப்பதாக அறிவித்துள்ளது. அதனால் ஆளுநர் பாகு சௌஹானைச் சந்தித்து ஆட்சி அமைக்க நாங்கள் உரிமை கோரினோம். ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்தோம். பாஜக மற்றும் மற்ற கட்சிகளின் ஆதரவு தேசிய மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்துள்ளது. இவ்வாறு கூறினார்.