கர்நாடக தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் தோல்வியை காட்டுகிறது - ஜெய்ராம் ரமேஷ் பேட்டி

 
Jairam Ramesh

கர்நாடக தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பதையும், பிரதமர் மோடி தோல்வி அடைந்திருப்பதையும் தெளிவாக காட்டுகின்றன என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.  தற்போதைய நிலவரத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 138 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 62 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கர்நாடக தேர்தலில் பா.ஜ.க., இது பிரதமர் மோடி மீதான வாக்கெடுப்பு என்று கூறி பிரச்சாரம் செய்தது. இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பதையும், பிரதமர் மோடி தோல்வி அடைந்திருப்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. இவ்வாறு கூறினார்.