பெங்களூருவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. அடுத்த முதல்வர் யார் என எதிர்பார்ப்பு..

 
congress

தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து  காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று மாலை கூடுகிறது.  கர்நாடக முதலமைச்சராகப் போவது சித்தராமையாவா? அல்லது டி.கே.சிவக்குமாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு  கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ்,  ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் திட்டமிட்டபடி நேற்று ( மே 13) எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்த நிலையில், இறுதியில் 136 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.  ஆளும் பாஜக 65 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியை சந்தித்தது.  ஜனதா  தளம் கட்சி 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.  அதிலும் பாஜக அமைச்சர்கள் 14 பேர்  தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் படுதோல்வியை சந்தித்திருக்கின்றனர்.  
 karnataka election congress
இதன்மூலம் தென்னிந்திய மாநிலங்களில் ஒரு மாநிலங்களில் கூட பாஜக ஆட்சியில் இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதன்படி இந்த  வெற்றியை தொடர்ந்து   காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் நடக்கிறது. வெற்றிபெற்ற அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கட்சி மேலிடம் தெரிவித்திருக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய முதலமைச்சர்  தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.

எம்.எல்.ஏக்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி அடுத்த முதல்வர் முடிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் பதவி ஏற்பு விழா வருகிற 17-ந்தேதி அல்லது 18-ந் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக்கூட்டத்தில்  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லியில் இருந்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.