சித்தராமையாவுக்கு எனது வாழ்த்துகள்- டி.கே.சிவக்குமார்

 
DK Sivakumar

சித்தராமையாவுக்கு வாழ்த்துகள் எனக் கூறி டி.கே.சிவக்குமார் பேட்டியளித்துள்ளதால், முதலமைச்சராக அவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

சிவக்குமார்

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாரான நிலையில், முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர்  டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது. இதனிடையே கட்சி தலைமையை சந்திக்க சித்தராமையா இன்று டெல்லி சென்றார்.  

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் டெல்லி செல்லவிருந்த நிலையில் திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. உடல்நிலை சரியில்லை எனக்கூறி டி.கே.சிவக்குமார் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமின்றி அவசியத் தேவை என்றால் டெல்லி அழைக்கட்டும் எனக் கூறி அவர் திடீரென வீடு திரும்பினார்.

இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “நான் போர்க்கொடியும் தூக்கவில்லை. யாரையும் மிரட்டவுமில்லை. முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி மேலிடத்திடமே விட்டுவிட்டேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மை ஆதரவு சித்தராமையாவுக்கு இருந்தால் அவருக்கு எனது வாழ்த்துகள். தன்னிடம் எந்த எம்.எல்.ஏவின் ஆதரவும் இல்லை. காங்கிரஸிடம் 135 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது. கர்நாடகாவில் முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவு செய்ய கட்சி தலைமையிடமே விட்டு விடுகிறேன்வயிற்றுவலி காரணமாகதான் நான் டெல்லி செல்லவில்லை” என்றார்.