சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்க வேண்டும் - மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

சனாதனத்தை பற்றி அவதூறாக பேசினால் நாக்கை பிடுங்க வேண்டும், கண்ணை நோண்ட வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை ஒழிக்க வேண்டும், எதிர்க்க முடியாது. டெங்கு, மலேரியாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறினார். இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அயோத்தி சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் என அறிவித்தார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவேன் என உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார்.
இந்த நிலையில், சனாதனத்தை பற்றி அவதூறாக பேசினால் நாக்கை பிடுங்க வேண்டும், கண்ணை நோண்ட வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்க வேண்டும், கண்ணை நோண்ட வேண்டும். சனாதனத்திற்கு எதிராக பேசும் யாரும் அரசியல் அதிகாரம் அந்தஸ்த்தை தக்கவைக்க முடியாது. சனாதனத்தை ஒழிப்பதாக பேசுபவர்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இவ்வாறு கூறினார்.