மணிஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு - சி.பி.ஐ. அதிரடி

டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசு மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதோடு, சலுகைகளையும் அரசு வழங்கியதை குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதில் அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவிற்கு தொடர்பு இருக்கலாம் எனவும் சிபிஐ சந்தேகிக்கித்தது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, டெல்லி சிபிஐ அலுவலகம் முன்பு அவர் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். விசாரணைக்கு பின் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிசோடியாவை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்தது. சிபிஐ காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து மார்ச் 20 வரை மணிஷ் சிசோடியாவை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
இந்த நிலையில் மனீஷ் சிசோடியா உள்ளிட்ட 7 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நேர்மையற்ற முறையில் சொத்துக்குவிப்பு, குற்றச் சதி, ஏமாற்றும் நோக்கத்திற்காக போலி ஆவணம் தயாரித்தல், போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல், குற்றவியல் முறைகேடு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.