எதிர்க்கட்சிகள் தொடர் அமளி - நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

 
Parliament

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது.  அதானி குடும்பம் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விசாரணை நடத்தக்கோரி பிரச்சனை எழுப்பியதால், பெரும்பாலான நாட்கள் அவைகள்  முடங்கியது.  விடுமுறைக்குப் பின்னர் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு  காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது.  ஏப்ரல் 6ம் தேதி வரை இந்த அமர்வு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் 26 மசோதாக்களையும்,  மக்களவையில் 9 மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  காலை 11 மணிக்கு  அவை தொடங்கியதுடன் இந்திய நாடாளுமன்றத்தை பற்றி லண்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மக்களவையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பிரஹலாத் ஜோஷி ஆகியோரும்,  மாநிலங்களவையில் பியூஷ் கோயலும் பவலியுறுத்தினர்.   இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து   நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து, இரு அவைகளும் பிற்பகல்2 மணிக்கு கூடியது. மீண்டும் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி, தொடர் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நாடளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.