சிமெண்ட் கான்க்ரீட் லாரி கவிழ்ந்து நசுங்கிய BMW கார் - வழக்கறிஞர் உயிரிழப்பு

 
ஃப்

கீசரா சுங்கச்சாவடியில் சிமென்ட் கலவை லாரி பி.எம்.டபுள்யூ கார் மீது கவிழ்ந்த விபத்தில் பிரபல வழக்கறிஞர் பலியானார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் யெல்லாரெட்டிகுடாவை சேர்ந்த ஆந்திர, தெலங்கானா உயர் நீதிமன்றங்களின் மூத்த வழக்கறிஞரான போடுலூரி சீனிவாச ராவ் தனது உயர்ரக பி.எம்.டபுள்யூ காரில் விஜயவாடாவில் இருந்து ஐதராபாத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், காஞ்சிகச்சார்லா மண்டலத்தில் உள்ள கீசரா சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக  நிறுத்தினார்.  அப்போது, ​​ஐதராபாத் நோக்கிச் சென்ற ஒரு சிமென்ட் கலவை டேங்கர் லாரியின் பிரேக் செயலிழந்ததால், அது அதிவேகமாகச் சென்று சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த சீனிவாச ராவ் கார் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் முற்றிலுமாக நசுங்கியதால் காரில் இருந்த சீனிவாச ராவ் உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கிய லாரி 16 சக்கரங்கள் கொண்ட அதிக சுமை கொண்ட டேங்கர் என்பதால் கார் மீது விழுந்தவுடன் கார் நசுங்கியது.  இந்த விபத்தால் விஜயவாடா - ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டதால்  வாகனங்கள் ஒரே வழியில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார் மீது விழுந்த டேங்கர் லாரியை கிரேன்கள் மற்றும் ஜேசிபி உதவியுடன் மிகுந்த சிரமத்துடன் அகற்றி போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் அகற்றினர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.