லஞ்சம் வாங்கிய பாஜக எம்.எல்.ஏ மகன் - கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்.. ரூ.8 கோடி பறிமுதல்..

பெங்களூருவில் ஒப்பந்தம் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏவின் மகன் லோக் ஆயுக்தா அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கர்நாடகம் மாநிலம் சென்னகிரி தொகுதியின் பாஜக எம்எல்ஏ-வாக இருந்து வருபவர் மாதல் விருபாஷப்பா. இவரது மகன் பிரசாந்த் மாதல் கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று, பெங்களூருவில் பொதுப்பணித் துறையில் தலைமை கணக்கு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கர்நாடக அரசு மைசூர் சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் துறைக்கு ரசாயன பொருள்கள் வாங்குவது தொடர்பாக டெண்ருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு பல ஒப்பந்ததாரர்கள் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், ஒரு ஒப்பந்ததாருக்கு டெண்டர் வழங்க பிரசாந்த் மாதல் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அதற்காக ஒப்பந்ததாரரிடம் ரூ.81 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஒப்பந்ததாரும் சம்மதம் தெரிவித்ததாகவும், வியாழக்கிழமை மாலை முதற்கட்டமாக ரூ.40 லட்சத்தை கொடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து கிரென்ட் சாலையில் உள்ள தன்னுடைய தந்தையின் அலுவலகத்தில் வைத்து அந்தப் பணத்தை பெற்றுக் கொள்வதாக பிரசாந்த் மாதல் தெரிவித்திருக்கிறார். இந்த லஞ்ச விவகாரம் குறித்து லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து பாஜக எம்எல்ஏ மாதல் விருபாஷப்பா அலுவலகத்தில், அவரது மகன் பிரஷாந்த் ஒப்பந்ததாரரிடம் இருந்து பணத்தை பெறும்போது லோக் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அதனைத்தொடர்ந்து அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் கட்டுக்கட்டாக ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி இந்த ரூ.40 லட்சம் உள்பட ரூ.1.7 கோடியை லோக் ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்து, பிரசாந்த் மாதலை கைது செய்தனர். அதன்பிறகு லஞ்சம் வாங்கிய புகாரில் பிரசாந்த் மாதல் வீட்டிலும் சோதனை நடத்தியதில், ரூ.6 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்கள், சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.