இஸ்லாமிய பெண்களிடம் ஹிஜாப்பை விலக்கி முகத்தை காட்ட சொன்ன பாஜக வேட்பாளர்

 
ஹிஜாப்

ஐதராபாத்தில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் அடையாள அட்டையை வாங்கி முகத்தை காட்ட சொன்ன பாஜக வேட்பாளர் மாதவி லதாவால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தலை பொறுத்தவரையில் ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.


இந்நிலையில் ஐதராபாத்தில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் பாஜக வேட்பாளர் மாதவி லதா ஆதார் அட்டை வாங்கி சரிபார்த்தார். அதன்பின் அவர்களை வாக்குச்சாவடிக்குள் அனுமதித்தார். மேலும் வாக்குச்சாவடியில் காத்திருந்த இஸ்லாமிய பெண்களிடம் பர்தாவை திறந்து முகத்தை காண்பிக்குமாறு கூறியதால் சர்ச்சை எழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். 


இதுகுறித்து  பாஜக வேட்பாளர் மாதவி லதா கூறுகையில், “நான் ஒரு வேட்பாளர். ஒருவரின் அடையாள அட்டையை சரிபார்க்கும் உரிமை சட்டப்படி எனக்கு உள்ளது. அவர்களிடம் ‘உங்கள் ஐடி கார்டுகளை காட்டுங்கள்’ என பணிவாகதான் கேட்டேன். இதை யாராவது பெரிதாக்க நினைத்தால், அவர்கள்தான் பயந்திருக்கிறார்கள்” என்றார்.

ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது மசூதியை பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சையில் சிக்கியவர் மாதவி லதா என்பது நினைவுக்கூறதக்கது.