புத்தாண்டில் கோர விபத்து; சுரங்க நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி; பலரை காணவில்லை!
ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம் தோஷம் பகுதியில் அமைந்துள்ளதூ டாடம் எனும் சுரங்கம். இங்குள்ள கல் குவாரியில் நேற்று மிக மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுரங்க தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த உடனே அங்கே வந்த தேசிய மற்றும் மாநில மீட்புப் படையினர், ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி பலியான 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற தொழிலாளர்களின் நிலை என்னவென்று இன்னமும் தெரியவில்லை.
சுரங்கத்தில் வேலை செய்த ஏராளமான தொழிலாளர்களைக் காணவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுக்கிறது. இரண்டாம் நாளாக இன்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டர், "பிவானி மாவட்டத்தில் தோஷம் பகுதியில் டாடம் சுரங்கத்தில் நடந்த நிலச்சரிவு எதிர்பாராதது. மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
உள்ளூர் அதிகாரிகளுடன் நான் தொடர்பில் இருந்து மீட்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன். அதேபோல் காயமுடன் மீட்போருக்கு தேவையான மருத்துவ உதவி குறித்து அறிவுறுத்தியுள்ளேன்” என்றார். டாடம் சுரங்கத்தில் சுரங்க பணிகள் அதிகளவில் நடப்பதால் மாசு காரணமாக அங்கு அப்பணிகளை நடத்தக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்தது. டிச.30ஆம் தேதி தான் தடை விலக்கப்பட்டது. அடுத்த நாளே பணிகள் தொடங்கின. இச்சூழலில் நேற்று புத்தாண்டில் நிலச்சரிவு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.