கர்நாடகாவில் இரட்டை என்ஜின் ஆட்சியில் ஊழல் இரட்டிப்பாகிறது.. பா.ஜ.க.வை தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

கர்நாடகாவில் இரட்டை என்ஜின் ஆட்சியில் ஊழல் இரட்டிப்பாகிறது என்று மாநில மற்றும் மத்திய பா.ஜ.க. அரசுகளை அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கினார்.

கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதத்துக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி களம் இறங்குகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கர்நாடகாவில் தனது முதல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றுகையில் கூறியதாவது: கர்நாடகாவில் 40 சதவீத கமிஷன் அரசு உள்ளது. 

அமித் ஷா

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கர்நாடகாவுக்கு வந்து மாநிலத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்க   வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை  பெற வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அப்போது, மாநிலத்தில் ஏற்கனவே பா.ஜ.க. ஆட்சி இருப்பதை யாரோ  அவருக்கு நினைவூட்டினார்.  கடந்த 4 ஆண்டுகளில் உங்களால் ஏன் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அமித் ஷா விமானம் மூலம் டெல்லிக்கு திரும்பிய அடுத்த நாளே, பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் மகன் கோடிக்கணக்கில் வராத பணத்துடன் பிடிபட்டார். தாவாங்கேரியை சேர்ந்த அந்த எம்.எல்.ஏ.வும், அவரது மகனும் இன்னும் கைது செய்யப்படவில்லை. மாறாக மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். 

பா.ஜ.க.

கர்நாடகாவில் உள்ள அமைச்சர்கள் 40 சதவீத கமிஷன் கேட்கிறார்கள் என்று மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் கெம்பண்ணா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இரட்டை என்ஜின் ஆட்சியில் ஊழல் இரட்டிப்பாகிறது, நமக்கு புதிய அரசாங்க என்ஜின் தேவை. கர்நாடகாவை மாற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். நாங்கள் உறுதியான நேர்மையானவர்கள். ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம், இலவச மின்சாரம் தருவோம், நல்ல அரசு பள்ளிகளை உருவாக்குவோம், தரமான கல்வியை வழங்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.