எங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளிப்பதாக உத்தவ் தாக்கரே உறுதியளித்தார்.. அரவிந்த் கெஜ்ரிவால்
![டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/migrated/2e3810298f0411c48c5fbaf5e844e090.jpg)
அவசர சட்டம் தொடர்பாக எங்களுக்கு நாடாளுமன்றத்தில் (மசோதாவை தோற்கடிக்க) ஆதரவு அளிப்பதாக உத்தவ் தாக்கரே உறுதியளித்தார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
யூனியின் பிரதேச உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு அண்மையில் அவசர சட்டம் பிறப்பித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் மற்றும் மக்கள் ஆணையை அவமதிக்கும் செயலாகும் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. இந்த அவசர சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்ற மாநிலங்களவையில் தோற்கடிப்பதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்கும் பணியை அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். மம்தா பானர்ஜியும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மும்பை சென்று சிவ சேனா (யு.பி.டி.) தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி.கள் சஞ்சய் சிங் மற்றும் ராகவ் சதா, டெல்லி அமைச்சர் அதிஷி ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு பிறகு உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். நாங்கள் எதிர்க்கட்சி என்று அழைக்கப்படக்கூடாது என்று நான் நினைக்கிறேன், உண்மையில், அவர்களை தான் (மத்திய பா.ஜ.க. அரசு) எதிர்க்கட்சி என்று அழைக்கப்பட வேண்டும், ஏனெனில் அவர்கள் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் எதிரானவர்கள் என்று தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், நாடாளுமன்றத்தில் (மசோதாவை தோற்கடிக்க) எங்களுக்கு ஆதரவளிப்பதாக உத்தவ் தாக்கரே உறுதியளித்தார். இந்த மசோதா (அவசர சட்டம்) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாவிட்டால், 2024ல் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது என்று தெரிவித்தார்.