பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமித்ஷா அஞ்சலி
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மூன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து வெளியுறவு அமைச்சர், செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை
நடத்தினார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அஞ்சலி செலுத்தினார். காவலர் கட்டுப்பாட்டு அறை பகுதியில் 29 பேரின் உடல்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளன. அவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்.


