ஆதித்யா எல்.1 விண்கலம் 3வது சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது - இஸ்ரோ தகவல்!

 
aditya l1

மூன்றாவது முறையாக புவியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து ஆதித்யா எல்.1 விண்கலம் உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை ஏவியது.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 02ம் தேதி  பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம்  ஆதித்யா விண்கல விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.  100-120 நாட்கள் பயணித்து ஆதித்யா L1 விண்கலம் சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆதித்யா எல்.1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து சுற்றுவட்ட  பாதையின் உயரம் உயர்த்தப்பட்டது. பின்னர் கடந்த 5-ஆம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டது. 

aditya l1

இந்த நிலையில், மூன்றாவது முறையாக புவியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து ஆதித்யா எல்.1 விண்கலம் உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
அதாவது 296 கிமீ x 71767 கிமீ என்ற அளவில் தற்போது ஆதித்யா விண்கலம் பூமியை சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 4வது முறையாக சுற்றுவட்ட பாதையை உயர்த்தும் பணி வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.