ரயிலில் AC கோச்சில் ஊதுபத்தி, எண்ணெய் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்த நபர்
ரயிலின் AC கோச்சில் விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்த நபரின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ரயில் குறித்த விவரங்களைக் கேட்டு X தளத்தில் இந்திய ரயில்வே நிர்வாகம் பதிவிட்டுள்ளது.

ஓடும் ரயிலின் AC கோச்சில் மேல் படுக்கையில் அமர்ந்திருக்கும் ஒருவர், பிரார்த்தனை செய்தவாறே எண்ணெய் விளக்கையும் ஊதுபத்தியையும் ஏற்றுவது தெரிகிறது . பெட்டி முழுவதும் புகை பரவத் தொடங்கியபோது, உடன் பயணித்த மற்றொரு பயணி தலையிட்டு, மூடிய குளிர்சாதன பெட்டிக்குள் ஏதேனும் அசம்பாவிதமாக தீப்பற்றினால் பெரும் விபத்து நேரிடும், எச்சரிக்கை அலாரம் ஒலிக்கலாம் அல்லது தீவிபத்து கூட ஏற்படலாம் என கவலை தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தற்பொழுது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ குடிமக்கள் குறைதீர்க்கும் தளமான ' ரயில்வே சேவா' , விசாரணையைத் தொடங்குவதற்காக ரயில் எண், தேதி மற்றும் பிஎன்ஆர் (PNR) போன்ற விவரங்களைக் கோரியுள்ளது. மேலும் , விரைவான தீர்வுக்காக பயணிகள் railmadad.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

