மோசமடைந்த காற்று மாசு.. டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை..

 
air pollution delhi

டெல்லியில் காற்றின் தரம் மோசமானதை அடுத்து அங்கு கட்டுமான பணிகளுக்கு அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது.

இந்தியாவில் காற்று மாசு அதிகரித்து வருவது மறுக்க முடியாத கசப்பான உண்மையாகும். அதிலும் தலைநகர் டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையில் இருந்து வருகிறது. கொரோனா கால கட்டத்தில் கட்டுபாட்டில் இருந்த காற்று மாசு தற்போது அதிகரித்து வருகிறது. டெல்லி அரசு முறையாக கட்டுப்பாடுகளை விதித்து காற்றுமாசை குறைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.  அதன் ஒரு பகுதியாக  கடந்த 5 ஆண்டுகளாகவே  டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது  பட்டாசு வெடிக்க தடை நீடித்து வருகிறது.  

பட்டாசு

இந்நிலையில் டெல்லியில் விதிக்கப்பட்டிந்த பட்டாசு தடையை  மீறி பலர் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடித்து கொண்டாடியதால், தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியிருக்கிறது.  இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்றின் தரக் குறியீடு தொடர்ந்து 350 அதாவது   ‘மிகவும் மோசம்’என்கிற அளவிலேயே இருந்து வந்தது. டெல்லி பல்கலைக்கழக பகுதியில் 355ஆக இருந்த நிலையில், இன்று 372ஆக  உயர்ந்திருக்கிறது.   

மோசமடைந்த காற்று மாசு.. டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை..

இதனால், காலையில் நடைபயிற்சி செய்பவர்கள், சைக்கிள் பயிற்சி செய்பவர்கள் வெகுவாக்  பாதிக்கப்பட்டுள்ளனர். மாசு நிறைந்த காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளதாக கவலை தெரிவிக்கும் அவர்கள்,  காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.  அதன்படி, ராஜஸ்தானில் செயல்பட்டு வரும் 45 நிலக்கரி சார்ந்த தொழில் ஆலைகளை  மூடும்படி  காற்றின் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, டெல்லியின் அண்டை மாநிலங்களான அரியானாவில் 17, உத்தரபிரதேசத்தில் 63 ஆலைகள் மூடப்பட்டுள்ளன.  அத்துடன்,  டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமானப் பணி மற்றும் தேச நலனுக்கான அத்தியாவசிய கட்டிட பணிகள் தவிர்த்து பிற கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.