உலகின் மிக நீண்ட தூர சொகுசுக் கப்பல் சுற்றுலா சேவை.. - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..
உலகிலேயே நதியில் மிக நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் சொகுசு கப்பல் சுற்றுலா சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே சொகுசு கப்பல் தான், ‘எம்.வி கங்கா விலாஸ் கப்பல்’.மொத்தம் 51 நாட்கள் பயணம், 3 ஆயிரத்து 200 கிலோமீட்டர் தூரம் , 5 ஸ்டார் விடுதி போல கட்டமைப்பு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சொகுசு கப்பல் என பல்வேறு பெருமைகளுடன் கங்கை நதியில் வலம் வரவுள்ளது இந்தக் கப்பல். 62 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் அகலத்துடன், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பலின் சேவையை இன்று பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்..
உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசி கங்கை ஆற்றில் இருந்து புறப்பட்டு 51 நாட்கள் 3, 200 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சொகுசு கப்பல் பயணிக்க உள்ளது. உலகிலேயே நதி வழியாக நீண்ட தூரம் பயணிக்க கூடிய சொகுசு கப்பல் இதுவேயாகும். முதற்கட்டமாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த 32 பயணிகள் இதில் பயணிக்க உள்ளனர். அவர்களைத் தவிர கப்பல் ஓடியவர்கள் 40 பேர் பயணிக்கின்றனர். மேற்குவங்கம் வழியாக வங்கதேசம் சென்று, பின்னர் அங்கிருந்து அசாமிற்கு இந்த கப்பல் பயணிக்கவுள்ளது. இந்தப் பயணத்தில் சுமார் 50 சுற்றுலாத் தலங்களை பயணிகள் கண்டுகளிக்க உள்ளனர்..
ஸ்பா,சலூன், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சொகுசு கப்பலில் பயணிக்க ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 51 நாட்களுக்கான மொத்த பயணத்திற்கு ரூ. 20 லட்சம் கட்டணம் ஆகும். முன்னதாக கங்கை ஆற்றங்கரையில் டென் சிட்டி என்று அழைக்கப்படும் கூடார நகரத்தை பிரதமர் திறந்து வைத்தார். சுற்றுலா பயணிகளையு கவரும் வகையில் இந்த நகரம் அமைக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை இந்த நகரம் செயல்பாட்டில் இருக்கும் என்றும், மழைக்காலத்தின் போது அனைத்து கூடாரங்களும் அகற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ரூ. 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்நாட்டு நீர் வழித் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..