உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள்.. - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..
இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும், பெண்களே அதிகளவு உடல் பருமனால் பாதிக்கப்படுவதாகவும் தேசிய குடும்பநலத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தேசிய குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “உடல் பருமனால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 19 % லிருந்து 23% ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 21% இருந்து 24% ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா 41% பெண்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் தேசிய அளவில் பெண்களில் கருவுறுதல் விகிதம் 2.2 சதவீதத்தில் இருந்து 2.0 சதவீதமாக குறைந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.இதனிடையே பீஹாரில் அதிகபட்ச கருவுறுதல் விகிதம் 2.98 சதவீதமாக இருக்கிறது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலை 38 லிருந்து 36% ஆக குறைந்திருக்கிறது. அதிகபட்சமாக வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மேகாலயாவில் 47 சதவீதமும், புதுச்சேரியில் குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும் உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் திருமண வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்யும் வழக்கம் குறைவாக உள்ள மாநிலங்களாக இருந்து வருகின்றன. நாட்டில் 79% பெண்கள் வங்கி அல்லது சேமிப்புக் கணக்கு வைத்திருப்பதாகவும் தேசிய குடும்ப நலத்துறை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 53% ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 79% ஆக அதிகரித்திருக்கிறது.