வாட்டி வதைக்கும் குளிர்.. - மக்கள் , வாகன ஓட்டிகள் கடும் அவதி..
வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிரால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்த பனிப்பொழிவு காரணமாக டெல்லி, இமாச்சலபிரதேச மாநிலங்களில் கடுமையான குளிரும் வாட்டி வதைத்து வருகிறது. அதிகாலை நேரங்களில் கிராமங்கள் அனைத்தும் போர்வை போர்த்தியது போல் பனி மூடிக்கிடக்கிறது. சாலைகளிலும் பனிமூட்டம் காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றன. அத்துடன் அனைத்து வாகனங்களும் மெதுவாக செல்வதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று 7 டிகிரி செல்சியசாக இருந்த வெப்பநிலை இன்று அதிகாலை 5 டிகிரி செல்சியசாக குறைந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே ,முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வருகிற 11-ந்தேதி வரை இதே நிலை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாக விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதம் ஆவதாகவும், ஆனால் தற்போது வரை எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை குறித்து பயணிகள் விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.