யார் இந்த ராஜீவ்குமார்?
இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுசில் சந்திரா ஓய்வு பெற்றதால் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார் மே 15ஆம் தேதி இன்று தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.
மூத்த தேர்தல் ஆணையரை அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கின்ற மரபுப்படி ராஜீவ் குமாரை அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்க குடியரசுத் தலைவரின் உத்தரவு வெளியிடப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் ராஜீவ்குமாரை தலைமை தேர்தல் ஆணையராக நியமித்துள்ளார் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருக்கிறார்.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் குமார் ஜார்கண்ட், பீகார், மற்றும் மத்திய அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்தவர். தற்போது இவர் தேர்தல் ஆணையராக உள்ளார். 1984 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் இணைந்த ராஜீவ்குமார் பதவியில் இருந்து ஓய்வு பெறும் முன்பாக மத்திய அரசின் செயலாளராக பணிபுரிந்தார்.
நிதித்துறை செயலாளராக 2020ல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், பப்ளிக் எண்டர்பிரைசஸ் செலக்சன் போர்டு என்கிற அரசு நிறுவனங்களுக்கு மூத்த அதிகாரிகளை தேர்வு செய்யும் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். நான்கு மாதங்கள் அந்த பொறுப்பில் இருந்த ராஜீவ் குமார், அதே 2020 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
ராஜீவ்குமாருக்கு முன்பாக தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா, சுசில் சந்திரா பதவி உயர்வு பெற்று தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெறும் நிலையில் , ராஜீவ் குமார் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Shri Rajiv Kumar today assumed charge as the 25th Chief Election Commissioner of India at Nirvachan Sadan, New Delhi in pursuance of the Ministry of Law & Justice, Government of India’s gazette notification dated 12th May 2022.
— Election Commission of India #SVEEP (@ECISVEEP) May 15, 2022
Press Note:- https://t.co/0A1ISMF1j5 pic.twitter.com/WY3Vdb2U76