கேரளாவில் களைகட்டிய ஓணம்.. ஒரு வாரத்தில் ரூ. 624 கோடிக்கு மது விற்பனை..
கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.624 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
கேரளாவில் மற்ற பண்டிகைகளைக் காட்டிலும் தொடர்ந்து 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இந்த நாட்களில் வெளியூர்கள், வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் கூட ஓணம் பண்டிகைக்கு கேரளத்துக்கு திரும்பிவிடுவர். பொதுவாகவே கேரளாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகம் என்றும், மது விற்பனை அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி மது விற்பனை களைகட்டியிருக்கிறது. ஏனெனில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இதனால் மது விற்பனையும் குறைவாகவே இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு எந்த வித கொரோனா கட்டுப்பாடுகளும் இன்றி ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதேபோல் மது விற்பனையும் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியிருக்கிறது. ஓணம் பண்டிகை தொடங்கிய முதல் முதல் 3 நாட்களிலேயே கேரளாவில் மது விற்பனை ரூ.300 கோடியை தாண்டியது. ஓரு வாரம் முடிந்திருக்கும் நிலையில், அங்கு மது விற்பனை ரூ.624 கோடியாக அதிகரித்துள்ளதாக , மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அத்துடன் கேரளாவில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கேரளாவில் தினசரி மதுகுடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் கடந்த ஆண்டு ரூ. 529 கோடிக்கு மது விற்பனை ஆனதாகவும், இந்த ஆண்டு கூடுதலாக ரூ.95 கோடி விற்பனை ஆகி மொத்த விற்பனை ரூ.624 கோடியாக உயர்ந்துள்ளதாக மதுபான விற்பனை அதிகாரிகள் தெரிவித்தனர். அம்மாநிலத்தில் கூடுதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டது மற்றும், மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்பட்டதே இதற்கு காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அத்துடன் மாநிலம் முழுவதும் மது விற்பனையில் கொல்லம் ஆசிரம கடை முதலிடம் பிடித்துள்ளதாகவும், அங்கு மட்டும் 1 கோடியே 5 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளதாம். அதேபோல் திருவனந்தபுரம், இரிஞ்சாலகுடா, எர்ணாகுளம், கண்ணூர், பரகண்டி அகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகளிலும் ரூ. 1 கோடிக்கு மேல் மது விற்பனை ஆகியுள்ளதாகவும் கூறினர்.