குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு

 
vice president

நாட்டின் அடுத்த குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் காலை 10 மணி முதல் நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 

தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வருகிற 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது.. குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக சார்பில்  மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் நிறுத்தப்பட்டுள்ளார். இதேபோல் எதிர்கட்சிகளின்  பொது  வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா  அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று தேர்தல் நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

voting

நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த உறுப்பினர்கள் துணை குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களித்தனர். இரு சபைகளையும் சேர்ந்த 788 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.  இந்நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாலை 6.30 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாஜகவிற்கு மக்களவையில் 303, ராஜ்யசபாவில் 91 என, மொத்தம் 394 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவும் உள்ளதால், 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று பாஜக சார்பில் போட்டியிடும் ஜக்தீப் தன்கர் எளிதாக வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது.