#BREAKING குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

 
voting

நாட்டின் அடுத்த குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடங்கியது

தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வருகிற 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (ஆகஸ்ட்6) நடக்கிறது. குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக சார்பில்  மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் நிறுத்தப்பட்டுள்ளார். இதேபோல் எதிர்கட்சிகளின்  பொது  வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா  அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் அதற்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. 

vice president

இந்த தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குரிமை கிடையாது. நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமே துணை குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியும். இரு சபைகளையும் சேர்ந்த 788 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். இது, மறைமுக தேர்தலாகவே நடக்கும். ஓட்டளிக்கும் எம்.பி.,க்கள் தங்களின் ஓட்டுச் சீட்டுகளை காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு முடிவடையவுள்ள நிலையில், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு இரவில் முடிவுகள் அறிவிக்கப்படும்.  பாஜகவிற்கு மக்களவையில் 303, ராஜ்யசபாவில் 91 என, மொத்தம் 394 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவும் உள்ளதால், 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று பாஜக சார்பில் போட்டியிடும் ஜக்தீப் தன்கர் எளிதாக வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், குடியரசு துணை தலைவருக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்.