பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயிலின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!
பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயிலின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் சேவை திட்டத்தை இந்திய ரயில்வே பல்வேறு மாநிலங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லி வாரணாசி வழிதடத்தில் முதன் முதலாக தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை டெல்லி -காஷ்மீர் , சென்னை - மைசூர் என பல வழி தடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசம் தெலுங்கானாவுக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 19ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே இந்த ரயில் இயக்கப்பட இருந்த நிலையில் வாராங்கல், கம்மம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பயண நேரமாக 8 மணி நேரம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தென்னிந்தியாவின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயிலின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சோதனை ஓட்டத்தின் போது நடந்த இந்த தாக்குதலில் இரண்டு கண்ணாடி ஜன்னல்கள் சேதம் அடைந்துள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு இந்த ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.