ஜார்க்கண்ட் சட்டபேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. வெற்றி பெறுவாரா முதல்வர் ஹேமந்த் சோரன்..??
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பெரும்பான்மையை நிரூபிக்க நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021ம் ஆண்டில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சுரங்க ஓதுக்கீடு பெற்றார். முதல்வர் அதிகாரத்தை பயன்படுத்தி அவர் தனது பெயரில் ஒரு சுரங்கத்தை குத்தகைக்கு பெற்றதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டு இருப்பதாகவும், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திலும் பா.ஜ.க.புகார் அளித்தது.
இதனையடுத்து முதல்வர் தனது பெயரிலேயே முறைகேடாக சுரங்கம் ஒதுக்கீடு செய்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், அவரை தகுதி நீக்கம் செய்ய ஜார்க்கண்ட் மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனையடுத்து ஹேமந்த் சோரனின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது முதலமைச்சர் பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மகாராஷ்டிரா, டெல்லி, பீஹார் மாநிலங்களைப்போன்று ஜார்க்கண்டிலும் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாக ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் கட்சி மாறாமல் இருக்க ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஹேமந்த் சோரன் மீது நாளை (செப்டம்பர் 5-ம் தேதி) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர முதலமைச்சர் ஹேமந்த் சோரன் விருப்பம் தெரிவித்துள்ளதாக சட்டசபை செயலகம் எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே பாஜகவும் தனது எம்.எல்.ஏ.க்கள் உடன் கூட்டம் நடத்தி, ஆளும் தரப்பிற்கு அழுத்தம் கொடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.