இன்றும் நாளையும் புதுவை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி மாநிலம் மற்றும் காரைக்காலில் தொடர் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன் விடாமல் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு இன்று மற்றும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என்று அறிவித்துள்ளார் புதுச்சேரி மாநிலத்தின் கல்வி அமைச்சர் நமச்சிவாயம்.
புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பகலில் விட்டு விட்டு மழை பெய்த நிலையில் பிற்பகல் 2 மணி முதல் பலத்த மழை பெய்தது.
இடி மின்னலுடன் கூடிய இந்த பலத்த மழையினால் ரெயின்போ நகர் பகுதியில் 8 தெருக்களிலும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கின்றது. சாமியார் பிள்ளை தோப்பு , உழவர் கரை நகராட்சி, சோலை நகர் ,பூமியான் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, புஸ்லி வீதி, இந்திரா காந்தி சிலை சதுக்கம், தம்பு நாயக்கர் வீதி ஆகிய பகுதிகளில் மலையின் போது சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.
மலையின் இந்த தீவிரத்தை அடுத்து புதுச்சேரி மாநிலத்தில் இன்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.