பெற்ற குழந்தையை 4வது மாடியில் இருந்து தூக்கி வீசிய தாய்..
கர்நாடகாவில் மனவளர்ச்சி குன்றிய 4 வயது குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்த எஸ்.ஆர்.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கிரண் - சுஷ்மா தம்பதி. கிரண் சாஃப்ட்வேர் என்ஜினியராகவும், சுஷ்மா பல் மருத்துவராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதிக்கு 4 வயது பெண் குழந்தை ஒன்றுள்ளது. இந்த குழந்தை பிறக்கும்போதே, வாய் பேச முடியாமலும், காது கேட்காமலும், மன வளர்ச்சி குன்றியும் குறைபாடுகளுடன் பிறந்துள்ளது. மாற்றுத்திறனாளியான குழந்தையின் நிலையால் சுஷ்மா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை 4வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் , சுஷ்மா குழந்தையுடன் நின்றுள்ளார்.
அப்போது திடீரென மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசியுள்ளார். இதில் கிழே விழுந்த குழந்தை நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையை தூக்கி வீசிய சில நிமிடங்களிலேயே சுஷ்மாவும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவர் பால்கனி தடுப்பு கம்பிகளில் ஏறிக்கொண்டிருந்த போதே அக்கம்பக்கத்தினர் மற்றும் அவரது கணவர் அங்கு வந்து அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர். மன வளர்ச்சி குன்றிய தனது குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.