அழுகை சத்தம் கேட்ட இடத்தை தோண்டியபோது உயிருடன் பெண் குழந்தை
அழுகை சத்தம் வந்த இடத்தில் தோண்டி பார்த்த போது அங்கே பிறந்து சில நாட்களான ஆன பெண் குழந்தை இருந்திருக்கிறது. அந்த பெண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது . அந்த குழந்தையை புதைத்தது யார்? பெற்றோர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் சபர்கந்தா மாவட்டம். அம் மாவட்டத்தில் கம்போய் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகிலாபென். இந்த விவசாயி தனது விவசாய நிலத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது வழியில் ஒரு சிறு குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. குழந்தையின் அழுகை சத்தம் வந்த இடம் நோக்கி சென்றிருக்கிறார். அங்கு குழந்தையை காணவில்லை . கொஞ்சம் உற்று கவனித்த போது தான் அது மண்ணுக்குள் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டிருக்கிறது .
இதனால் அச்சமடைந்த அந்தப் பெண் அங்கிருந்து ஓடிச் சென்று அருகே மின்சார வாரியத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்களிடம் சொல்லி இருக்கிறார். அவர்களும் பதறி அடித்து ஓடி வந்து அழுகை சத்தம் கேட்ட இடத்தை தோண்டி பார்த்திருக்கிறார்கள். மண்ணுக்குள்ளே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது.
உடனடியாக அந்த குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வெளிவந்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர் . குழந்தையின் பெற்றோர் குறித்து தேடி வருகின்றனர்.
பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தை உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட சம்பவம் கம்போய் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதே போல் தாஹோத் மாவட்டத்தின் கர்படா தாலுகாவில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை வறண்ட கிணற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அக்குழந்தையும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.