காஷ்மீர் என்கவுண்டர் - பயங்கரவாதி சுட்டுக்கொலை

 
kashmir

ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில்,  2 வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் க்ரீரி பகுதியில் உள்ள வாணிகம் பாலா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வாணிகம் பாலா பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படை வீரர்கள், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியா சுட தொடங்கினர். இதனை சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக எதிர் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படை வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், இரு தரப்பினரிடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான். இதேபோல் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடைபெற்ற  வாணிகம் பாலா பகுதியில் மற்ற பயங்கரவாதிகள் யாரேனும் உள்ளனரா என பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் கொல்லப்பட்ட பயங்கரவாதி எந்த பிரிவைச் சேர்ந்தவன் என்பது குறித்தும் அடையாளம் காணப்பட்டு வருகிறது.