மத்திய அரசின் திறமையற்ற கொள்கைகளால், தெலங்கானாவுக்கு மட்டும் ரூ.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.. சந்திரசேகர் ராவ்

 
தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்… பா.ஜ.க. குற்றச்சாட்டு..

மத்திய அரசின் திறமையற்ற கொள்கைகளால், தெலங்கானாவுக்கு மட்டும் ரூ.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தாக்கினார்.

தெலங்கானா மாநிலம் மஹபூபாத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் கே.சந்திரசேகர் ராவ் பேசுகையில் கூறியதாவது: சமுதாயம் பெரும் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் அனைவரின் நலனுக்காகவும் விரும்புவது முக்கியம். மத, ஜாதி வெறியை வளர்த்தால், மக்களை பிளவுபடுத்தி, பின்பற்றும் கொள்கைகள், நரகம் போல, ஆப்கானிஸ்தானை போல, தலிபான் விவகாரம் போல, பயங்கரமான நிலைக்கு இட்டுச் செல்லும். 

மத்திய அரசு

இந்த வெறுப்பின் காரணமாக, நாட்டின் உயிர் நாடியே எரிந்து விழும் சூழல் உருவாகும். எனவே குறிப்பாக இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மத்தியில் முற்போக்கு சிந்தனையும், பாரபட்சமும் இல்லாத அரசு அமைந்தால் மட்டுமே நாடும், மாநிலமும் முன்னேற்றம் அடைய முடியும். எதிர்கால அரசியலில் நாடு முழுவதும் முன்னேறும் வழியை தெலங்கானா காட்டுவதை விரும்புகிறது. மத்திய அரசானது மாநில அரசுக்கு இணையாக செயல்பட தவறியதால், தெலங்கானாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர வேண்டிய அளவு வளரவில்லை. 

மொத்த உள்நாட்டு உற்பத்தி

2014ல் தெலங்கானா மாநிலம் உருவாகும்போது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.5 லட்சம் கோடியாக இருந்தது. இன்று அது 11.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் திறமையற்ற கொள்கைகளால், தெலங்கானாவுக்கு மட்டும் ரூ.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் பொருளாதார வல்லுநர்கள், ரிசர்வ் வங்கி மற்றும் சி.ஏ.ஜி. மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. தெலங்கானாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.14.50 லட்சம் கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசின் கொள்கைகளால் ரூ.11.50 லட்சம் கோடியாக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.