மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய ஆசிரியை
பள்ளி மாணவியை திருமணம் செய்வதற்காக ஆசிரியை ஆணாக மாறிய ஆச்சர்ய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஆணாக மாறி பெற்றோர் சம்மதத்துடன் மாணவியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார் மீரா. இவர் தான் பணிபுரிந்து பள்ளி மாணவி கல்பனாவை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் பெண்கள் என்பதால் இதற்கு எதிர்ப்புகள் இருக்கும் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனாலும் சமூகத்திற்காக ஆணாக மாற நினைத்திருக்கிறார் மீரா.
இதனால் ஆசிரியை மீரா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறி இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பெற்றோர் முழு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறார்கள். அறுவை சிகிச்சைக்கு பின்னர் மீரா தனது பெயரை ஆரவ் குந்தல் என்று மாற்றி இருக்கிறார் .
பள்ளியில் உடற்கல்வி வகுப்புகளின் போது கல்பனாவை மீரா சந்தித்திருக்கிறார். அப்போதுதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இது குறித்து கல்பனா, நான் ஆசிரியை மீராவை ஆரம்பத்தில் இருந்தே விரும்பினேன். அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும் கூட நான் அவரை திருமணம் செய்து இருப்பேன் அறுவை சிகிச்சைக்கும் நான் மீராவுடன் சென்று அறுவை சிகிச்சையின் போதும் நான் அவருக்கு உதவிகள் செய்தேன் என்று கூறியிருக்கிறார்.
இந்த செய்தியும் இதுகுறித்து புகைப்படங்களும் வலைத்தளங்களில் வைரலாகி வருவதன் மூலம், இந்த திருமணம் அரிதாக இருந்தாலும் இது பெற்றோர் சம்மதத்துடன் நடந்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது என்று பலரும் சொல்லி வருகின்றனர்.