இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா

 
congress mps

நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலையின் முன்பு தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த மழைக்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு , ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட  பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த ஒரு வாரமாகவே மக்களவை,  மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கியது.   இந்நிலையில் நேற்று காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளுடன் கடும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் அவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர் மதியம் 3 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.  அவைத்தலைவர் இருக்கை முன்பாக நின்று பதாகைகளுடன்  அமளியில் ஈடுபட்டதால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களை இடைநீக்கம்  செய்து சபாநாயகர் அறிவித்தார்.  காங்கிரஸ் எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகிய 4 பேரை அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடப்பு கூட்டத்தொடரில் இருந்து  முழுவதுமாக  சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

parliament

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு  4 பேரும் தர்னாவில் ஈடுபட்டனர் மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவின் நகலை கிழித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களவை உறுப்பினர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்களும் போராட்த்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.பி.க்களில் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.