நீதிபதிகள் நியமன பரிந்துரைகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் நிராகரித்தது - மத்திய அரசு தகவல்..
உயர்நீதிமன்ற நீதிபதி நியமன பரிந்துரைகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் நிராகரித்ததாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் இடங்களை நிரப்ப உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, மூத்த நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சுந்திரசூட், எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் குழு உள்ளது. நீதிமன்றங்களில் காலியிடங்களை நிரப்ப நீதிபதிகளின் பெயர்களை உயர்நீதிமன்ற கொலீஜியம், உச்சநீதிமன்ற கொலிஜியத்திற்கு பரிந்துரைத்தது. நீதிபதிகளின் பரிந்துரை பட்டியலை உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும். ஆனால் அண்மைக்காலமாக கொலிஜியம் குழுவிற்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கான பரிந்துரைகளில் 30%, உச்சநீதிமன்ற கொலீஜியம் நிராகரித்து விட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
அதாவது, கடந்த 2021-ஆம் ஆண்டில் 251 பெயர்கள் உயர்நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அதில் 2022-ல் மே மாதம் வரை 148 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் மத்திய சட்ட அமைச்சகம் நாடாளுமன்ற நிலை குழுவிற்கு அளித்த தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், உயர்நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த 74 பேரை உச்சநீதிமன்ற கொலீஜியம் ஏற்கவில்லை என்றும், சுமார் 30% பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் கொலீஜியம் நிராகரித்துள்ளது. அதில்,.எஞ்சிய 29 பேரின் நியமனங்கள் மத்திய அரசால் கிடப்பில் வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.