அக்னிபாத் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : மீண்டும் பீஹார், உ.பி.யில் ரயில்களுக்கு தீ வைப்பு..
‘அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் 3 வது நாளாக போராட்டம் தொடர்கிறது. பீஹாரில் நேற்று ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட நிலையில், அங்கு இன்று மீண்டும் ரயிலும், உத்தரப்பிரதேசத்தில் ஒரு ரயிலுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளிலும் தற்காலிக ஆட்சேர்ப்புக்கான ‘அக்னிபாத்’ எனும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் இளைஞர்கள், 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவர். இவர்களுக்கு மாத ஊதியம் மற்றும் 4 ஆண்டுகள் நிறைவடைந்ததும், சேவா நிதி என்கிற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும்,. ஆனால் இவர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீஹார், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்பட நாடு முழுவதும் இளைஞர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் இளைஞர்களின் போராட்டத்தில் ஆங்காங்கே வன்முறையின் வெடித்தது. சாலைகளில் டயர்களை எரிப்பது, பேருந்து உள்ளிட்ட பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நேற்று பீஹார் மாநிலம், சாப்ராவில் போராட்டக்காரர்கள் ரயிலை தீ வைத்து எரித்தனர். இந்த நிலையில் இன்று காலை மீண்டும் பீஹாரிலும், உத்தரப்பிரதேசத்திலும் ரயிலுக்கு தீ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீஹாரில் லக்கிசராய் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். இதேபோல் உத்திரப்பிரதேசம் மாநிலம் பல்லியாவில் ஒரு கும்பல் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயில் நிலைய உடமைகளை சேதப்படுத்தியது. அத்துடன் அங்கு நின்றிருந்த பயணிகள் ரயிலுக்கும் தீ வைத்தனர். ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், பொது சொத்துக்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.