மியான்மர் நாட்டில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை - மத்திய அரசு விளக்கம்

 
muralitharan

மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார்.

மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி  பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்களை உடனடியாக அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்துவரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்சினை குறித்து தெரிவித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தார். 

இந்நிலையில், மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார்.இது தொடர்பாக முரளிதரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மியான்மரில் உள்ள இந்தியர்கள் குறித்து நமது தூதர் வினய் குமாரிடம் பேசினோம். அவர்களை பத்திரமாக மீட்பது குறித்து இந்திய தூதர் என்னிடம் விவரித்தார். இந்தியர்களை விரைவில் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.