முதன்முறையாக ஆன்லைன் கால் டாக்சி சேவை தொடங்கும் மாநில அரசு..
நாட்டிலேயே முதன்முறையாக மாநில அரசு சார்பில் ஆன்லைன் டேக்சி சேவையை கேரள அரசு கொண்டு வந்துள்ளது.
நாடு முழுவதும் பல தனியார் கால் டாக்சி நிறுவனங்கள் ஆன்லைன் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்கவை ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள். இந்த நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக ஆன்லைன் கால் டான்சி சேவையை ஒரு மாநில அரசு முன்னெடுத்திருக்கிறது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு சார்பில் இ - டாக்சி சேவை தொடங்கப்பட உள்ளது. கேரள சவாரி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த டாக்சி சேவை , அடுத்த மாதம் (ஆகஸ்ட் மாதம் ) முதல் அமலுக்கு வருகிறது.
முழுமையான பாதுகாப்பான மற்றும் சர்ச்சை இல்லாத பயணத்திற்கு உறுதி அளிக்கும் வகையில் இந்த டாக்சி சேவை தொடங்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள அரசின் முன்னோடி திட்டமான இது, மலையாள மாதமான சிங்கம் மாத பிறப்பு நாளான ஆகஸ்டு 17-ந்தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இது குறித்து மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது, “ இ - டாக்சி சேவையை அரசு துறை நடத்துவது ஒருவேளை உலக அளவிலும் முதல் நிகழ்வாக இருக்கலாம். தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ள ஆட்டோ-டாக்சி தொழிலாளர் துறைக்கு இந்த தனித்துவமான சேவை ஒரு உதவிகரமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.