மாஜி அமைச்சர் மீது செருப்பு வீச்சு! தலையில் விழாததால் பெண் வருத்தம்
முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீது பெண் ஒருவர் செருப்பை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக அந்த செருப்பு பார்த்தா மேல் படாமல் கார் மீது விழுந்துவிட்டது என்று பலரும் நினைக்கையில், அவர் தலை மீது விழுந்திருந்தால் நிம்மதி அடைந்திருப்பேன் என்கிறார் செருப்புவீசிய பெண்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ஆசிரியர் பணி நியமன மோசடி தொடர்பான வழக்கில் தொழில்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தார்கள். இதன் பின்னர் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.
பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டில் 50 கோடி ரூபாய் பணம், கிலோ கணக்கில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால், அர்பிதா முகர்ஜி வீட்டில் சிக்கிய பணம் என்னுடையது அல்ல. நேரம் வரும்போது அதுகுறித்து கூறுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் பார்த்தா சாட்டர்ஜியை உடல் பரிசோதனைக்காக கொல்கட்டா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அதிகாரிகள். பரிசோதனை முடிந்து புறப்படுவதற்காக பார்த்தா சாட்டர்ஜி காரில் காத்திருந்தார். அப்போது மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் தனது இரண்டு செருப்புளையும் கழற்றி பார்த்தா சாட்டர்ஜி மீது வீசினார் .
பார்த்தா சுதாரித்துக் கொண்டதால் செருப்பு கார் மீது விழுந்தது. நல்ல வேளையாக அந்த செருப்பு பார்த்தா மேல் படாமல் கார் மீது விழுந்துவிட்டது என்று பலரும் நினைக்கையில், அவர் தலை மீது விழுந்திருந்தால் நிம்மதி அடைந்திருப்பேன் என்கிறார் செருப்புவீசிய பெண்.
நான் இங்கு மருந்து வாங்க வந்தேன். எங்களால் டாக்டரை கூட சரியாக பார்க்க முடியாது. ஆனால் கோடி கணக்கில் படம் வைத்துள்ளவர்கள், கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குகிறார்கள் . மருத்துவமனைக்கு பெரிய கார்களில் வருகிறார்கள். இதனால் தான் செருப்பு வீசினேன் செருப்பு அவரது தலையில் விழுந்திருந்தால் நான் நிம்மதி அடைந்திருப்பேன் என்று சொல்லி இருக்கிறார் மாஜி மீது செருப்பு வீசிய அந்தப்பெண்.