ரன்பீர் கபூர் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்கம் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு மும்பை அந்தேரி பகுதியில் சித்ரக்கூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. இங்கு திடீர் என நேற்று தீ விபத்து ஏற்பட்டது.இத்தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். தீ விபத்தில் நேற்று மாலை சிக்கிய நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு நேற்றிரவு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் ஸ்பெயினில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு மும்பை திரும்பிய நிலையில், அந்தேரி பகுதியில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டது.காமெடி மற்றும் காதலை கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் போனி கபூர், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.