குடியரசுத் தலைவர் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு - இரவு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் ராம்நாத் கோவிந்த்..

குடியரசு தலைவர் ராம்நாத் கோவித்தின் பதவிகாலம் இன்றுடன் நிறைவு பெறுவதையொட்டி, இன்றிரவு 7 மணிக்கு அவட் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் கடந்த 2017 ஆம் ஜூலை மாதம் 25 ஆம் தேதி, நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார். இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் ( ஜூலை 24ம் தேதி) நிறைவு பெறுகிறது. முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். கடந்த 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படன. அதில் பாஜக சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, நாட்டின் 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு நாளை (ஜூலை 25) காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளார். புதிய குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வழிவிட்டு ஜனாதிபதி மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் இன்று வெளியேறுகிறார். இதனைமுன்னிட்டு நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி தலைவர்கள், எம்பிக்களுடன் பிரியாவிடை பெற்றார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்றிரவு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். இரவு 7 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்த உள்ளார். தனது பதவிக்காலத்தில் வகித்த பொறுப்புகள், கடந்து வந்த பாதை ஆகியவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் மக்களிடம் விவரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.