5வது நாள் பயணத்தை மேற்கொள்ளும் ராகுல்.. கேரளாவில் மட்டும் 18 நாட்கள் நடைபயணம்..

 
  ஒற்றுமைக்கான நடைபயணத்தை தொடங்கிய ராகுல்..

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘ஒற்றுமைக்கான பயணம் ’ என்ற பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.  நாடு முழுவதும் 12 மாநிலங்கள் வழியாக  150 நாட்கள் 3, 570 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரையை மேற்கொள்கிறார்.  இந்த யாத்திரையானது  திருவனந்தபுரம், கொச்சி, நிலம்பூர், மைசூரு, பெல்லாரி, ராய்ச்சூர், விக்ரபாத், ஜல்கயோன், இந்தூர், ஆழ்வார், டெல்லி, அம்பாலா, பதான்கோட், ஜம்மு சென்று ஸ்ரீ நகரில் முடிவடைகிறது. இதில் ராகுல் காந்தியுடன்  காங்கிரஸ் தலைவர்கள் 120 நடைபயணம் மேற்கொள்கின்றனர். 

 ராகுல்

அதன்படி, கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில்  தொடங்கிய தனது நடை பயணத்தை  ராகுல் காந்தி நேற்றுடன் தமிழகத்தில் நிறைவு செய்தார்.  அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்கிறேன் என உருக்கமாக தெரிவித்தார்.  பின்னர் நேற்று இரவு கேரள  சென்று தங்கிய அவர், இன்று காலை மீண்டும் தனது நடைபயணத்தை தொடங்கி இருக்கிறார். 

5வது நாள் பயணத்தை மேற்கொள்ளும் ராகுல்..  கேரளாவில் மட்டும் 18 நாட்கள் நடைபயணம்...

இந்திய ஒற்றுமை பயணத்தின் அடுத்த 18 நாட்களுக்கு ராகுல் காந்தி கேரளாவில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று காலை பாறைசாலை பகுதியில் இருந்து தொடங்கியிருக்கும் பயணத்தில், 12 கி.மீ நடந்து நெய்யாற்றின் கரை பகுதியில் உள்ள  பள்ளியில் (GR Public school ) ஒய்வு எடுக்கவுள்ளார். அதன் பின் மாலை மீண்டும் அங்கிருந்து நடை பயணத்தை தொடங்கி இரவு வெள்ளயாணி பகுதியில் நிறைவு செய்கிறார். இரவு அங்குள்ள வேளாண் கல்லூரியில் தங்குகிறார். கேரளாவிம் மேற்கொள்ள இருக்கும் 18 நாள் பயணத்தில், திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் நான்கு நாட்கள் நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.