மோடியை கண்டு காங்கிரஸ் கட்சி பயப்படாது - ராகுல் காந்தி

 
rahul

நேஷனல் ஹெரால்டு வழக்கில் பிரதமர் நரேந்திர மோடியை கண்டு காங்கிரஸ் கட்சி பயப்படாது என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகம் உட்பட அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். 

rahul

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது: பிதமர் நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. பரவாயில்லை.. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன். எங்கள் மீது சில அழுத்தம் கொடுப்பதன் மூலம் எங்களை அமைதிப்படுத்த முடியும் என்று பாஜக அரசு நினைக்கிறது. ஆனால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் இந்த நாட்டிற்காக என்ன செய்கிறார்கள். ஜனநாயகத்துக்கு எதிராக அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அதற்கு எதிராக நிற்போம். இவ்வாறு கூறினார்.