பீகாரில் பரவி வரும் ஊழல்.. முதல்வர் நிதிஷ் குமாரை தாக்கிய கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.
பீகாரில் பரவி வரும் ஊழலை சுட்டிக்காட்டி முதல்வர் நிதிஷ் குமாரை அவரது கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார்.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் பரவி வரும் ஊழலை சுட்டிக்காட்டி முதல்வர் நிதிஷ் குமாரை அவரது கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்களே கடுமையாக தாக்கி வருகின்றனர். அண்மையில் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சுதாகர் சிங் தாக்கினார்.
தற்போது ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ. விஜய் குமார் மண்டல் முதல்வர் நிதிஷ் குமாரை வெளிப்படையாக விமர்சனம் செய்து பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ. விஜய் குமார் மண்டல் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் ஒன்றிய அளவில் இருந்து தலைமை செயலகம் வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது. விவசாயிகள் வேதனையில் உள்ளனர். விவசாயிகள் மிகவும் துயரத்தில் இருக்கும் போது, நிதிஷ் குமார் என்ன வகையான சமாதான யாத்திரை மேற்கொள்கிறார். கடந்த 17 ஆண்டுகளில் பீகார் வளர்ச்சி அடைந்து இருக்க வேண்டிய அளவுக்கு அடையவில்லை. இதற்கு நாமும் பொறுப்பு.
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் காரணமாக பீகாரில் சாலைகள் மேம்பட்டன. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சியில் மின்சாரம் மேம்படுத்தப்பட்டது. மாநிலத்தில் அதிகாரத்துவத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதிஷ் குமாரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒரு அரசாங்கம் எப்போதும் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் பீகாரில் இது நடக்கவில்லை. கடந்த 17 ஆண்டுகளாக நிதிஷ் குமாரை தொடர்ந்து ஆதரித்து வருவதால் பா.ஜ.க.வும் இதற்கு பொறுப்பு. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.